ஆர்யாவை தொடர்ந்து சைக்கிள் ரேசில் கலந்துக் கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு

சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தாலும் சைக்கிளில் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. கடந்த ஒருவருடமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக செய்துவந்த ஆர்யா ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டின் மோட்டலா என்ற ஊரில் நடந்து வரும் போட்டியில் கலந்துகொண்டார்.

அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தை கடந்து பரிசு வென்றுள்ளார்.

இவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆர்யாவின் நண்பரான விஷால் ஆர்யாவுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஆர்யா நன்றி தெரிவித்து பின்னர், அடுத்த வருடம் என்னுடன் இந்த ரேசில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு விஷாலும் கண்டிப்பாக கலந்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய வாழ்த்துக்களை ஆர்யாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு ஆர்யா, அடுத்த வருடம் நீயும் உன் தம்பி பிரேம்ஜியும் என்னுடன் ரேசில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு வெங்கட்பிரபு, நான் உடனே என்னுடைய பயிற்சியை தொடங்குகிறேன் ஆனால், பிரேம்ஜி வருவானா என்று எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply