புலியுடன் மோதுகிறதா பாயும் புலி

விஜய் நடிப்பில் ‘புலி’ படம் ஆக்ரோஷ வேகத்துடன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்களுக்காக படக்குழு தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் முகாமிட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதி படத்தை வெளியிட்டு விடலாம் என படக்குழுவினர் எண்ணினர்.

ஆனால், படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பணிகளுக்கு அதிக காலம் தேவைப்படுவதால் திட்டமிட்டப்படி படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடலாம் என்று நினைத்தால், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளும் இப்படத்திற்கு தடையாய் அமைந்துள்ளது.

அதாவது, ரூ.15 கோடிக்கு மேல் தயாராகும் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டால், சுதந்திர தினத்துக்கு பிறகு வரும் பண்டிகை நாளிலேயே ‘புலி’ படத்தையும் வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, சுதந்திர தினத்துக்கு பிறகு வரும் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியன்று ‘புலி’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பண்டிகை நாளில்தான் விஷால் நடிப்பில் உருவாகி வரும் பாயும் புலி படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். ஆகவே, வரும் செப்டம்பர் 17, விநாயகர் சதுர்த்தியன்று ‘புலி’யும் ‘பாயும் புலி’யும் மோத தயாராகி வருகிறது. விஜய்யும்-விஷாலும் இப்படி நேருக்கு நேர் மோதிக் கொள்வது இது ஒன்றும் புதிதல்ல.

ஏற்கெனவே, விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகனு’டன் விஷால் நடித்த ‘தாமிரபரணி’ போட்டியாக களமிறங்கியது.

அடுத்து, விஜய்யின் ‘கத்தி’க்கு போட்டியாக விஷாலின் ‘பூஜை’ களமிறங்கியது. தற்போது மூன்றாவது முறையாக விஜய்யின் ‘புலி’க்கு போட்டியாக ‘பாயும் புலி’யும் களத்தில் குதிக்க தயாராகி வருகிறது.

Leave a Reply