துல்கர் சல்மான் இடத்தை பிடித்த நானி

துல்கர் சல்மான் இடத்தை பிடித்த நானி

மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் நாயகனாக நடித்தவர் துல்கர் சல்மான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். மேலும் துல்கர் சல்மானுடன் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

மணிரத்னம் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்னால் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது. துல்கர் சல்மான் சார்லி, கலிப்பு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்றும் பிரதாப் போத்தன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. இதனால் மணிரத்னம் படத்தில் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு விலகியதாக கூறப்படுகிறது.

இதனால் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் தெலுங்கில் இருந்து முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு நானி பொருந்தமாக இருப்பதாகவும் அவரை தேர்வு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் இந்தப் படத்துக்கும் வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.