ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்: சுமன் பேட்டி

ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்: சுமன் பேட்டி

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே கராத்தே போட்டி நேற்று தொடங்கியது. இன்று காலை மீண்டும் போட்டிகள் தொடங்கியது. விழாவிற்கு பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சுமன் கலந்து கொண்டு 2–வது நாள் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது. இந்த பட வாய்ப்பினால் தான் நான் மீண்டும் பிஸியாகி இருக்கிறேன். இந்தியிலும் நடித்து வருகிறேன். இதற்கு காரணம் ரஜினிசார்தான். தற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன்.

இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினிசார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி நடுவர்கள் செந்தில், பாலகிருஷ்ணன், கார்த்தி, கலைமணி, ரங்கராஜன் , சீனிவாசன் உள்பட பலர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.