கார் ஏறி இறங்கிய பின்னரும் உயிர்பிழைத்த அதிசயக் குழந்தை (Video)

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 3 வயதுக் குழந்தை மீது கார் ஏறி இறங்கிய பின்னரும் உயிர் பிழைத்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில், ஜோய் என்ற 3 வயது குழந்தை விளையாடியபடியே தனது வீட்டை விட்டு வெளியே நடந்து சென்றுள்ளது. அப்போது, அந்த வழியாக சாலையில் வந்த கார் ஒன்று, குழந்தை ஜோய் மீது மோதி உள்ளது. அதனை ஓட்டுநர் கவனிக்காத நிலையில், குழந்தையின் மீது காரின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது.

இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் கார் ஓட்டுனரிடம் தெரிவிக்க அவர் உடனே காரை நிறுத்தி, அதேகாரில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். குழந்தை ஜோய் மீது கார் ஏறி, இறங்கிய பிறகும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படாததால், குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்து உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவம், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது, அந்த பதற வைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.